போதை காளான், கஞ்சா விற்ற 6 பேர் கைது


போதை காளான், கஞ்சா விற்ற 6 பேர் கைது
x

கொடைக்கானல் அருகே போதை காளான், கஞ்சா விற்ற கேரளா முதியவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

போதை காளான்

கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் மேல்மலைப்பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் அருேக மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழிமறித்து, சிலர் போதை காளான் மற்றும் கஞ்சா விற்க முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்றபோது, 5 பேர் கொண்ட ஒரு கும்பல் தப்பி ஓடியது. அப்போது அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அந்த கும்பல் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், போதை காளான் மற்றும் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

6 பேர் கைது

இதையடுத்து பிடிபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரை சேர்ந்த வைரவேல் (வயது 32), லட்சுமணன் (38), மதன் (24), குணசேகரன் (52), பூண்டியை சேர்ந்த சத்யராஜ் (32), கேரளாவை சேர்ந்த சரத்குமார் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை காளான் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டர் சட்டம் பாயும்

இதற்கிடையே கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story