பெரம்பலூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 7 பேர் போட்டி; 2 பேர் போட்டியின்றி தேர்வு


பெரம்பலூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 7 பேர் போட்டி;  2 பேர் போட்டியின்றி தேர்வு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 7 பேர் போட்டியிடுகிறார்கள். 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

இடைத்தேர்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 28-ந்தேதி அந்த மனுக்களின் மீது ஆய்வு செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மொத்தம் 6 பேரில், 2 பெண்கள் உள்பட 3 பேர் தங்களது வேட்பு மனுவினை திரும்ப பெற்று கொண்டனர்.

2 பேர் போட்டியின்றி தேர்வு

இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றிய வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மொத்தம் 3 பெண்களில், ஒருவர் தனது வேட்பு மனுவினை திரும்ப பெற்று கொண்டார். அதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டு, அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றிய வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆலத்தூர் ஒன்றிய பிலிமிசை 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்களும் போட்டியிடுகின்றனர். இதனால் அந்தப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.

ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மணி என்பவரும், வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஜெகவள்ளி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story