தூத்துக்குடியில்தெருவில் சுற்றித்திரிந்த 71 நாய்கள் பிடிபட்டன


தூத்துக்குடியில்தெருவில் சுற்றித்திரிந்த 71 நாய்கள் பிடிபட்டன
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில்தெருவில் சுற்றித்திரிந்த 71 நாய்கள் பிடிபட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த 71 நாய்கள் பிடிபட்டன.

நாய் தொல்லை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்கள், தெருக்களிலும் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களும் அதிகமாக நடமாடுகின்றன. இந்த நாய்கள் அவ்வப்போது மக்களை கடித்து விடுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தி.சாருஸ்ரீ ஆகியோர் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் (பொறுப்பு) ஸ்டாலின் பாக்கியநாதன் மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

71 நாய்கள்

அதன்படி கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி பெருமாள்புரம், வி.வி.டி சந்திப்பு, பசும்பொன் நகர், அண்ணாநகர், மடத்தூர், பக்கிள் ஓடையை ஒட்டிய பகுதி, புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 71 தெரு நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்தனர். இந்த நாய்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மேலும், அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பிறகு மூன்று நாட்கள் பராமரிக்கப்படும் நாய்கள் மீண்டும் அதே பகுதியில் கொண்டு விடப்படும். இதேபோல் மாநகராட்சி பகுதி முழுவதும் மக்களுக்கு தொல்லையாக சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story