ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு


ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு
x

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியையிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியையிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளி ஆசிரியை

களியக்காவிளை அருகே உள்ள நெடுங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருடைய மனைவி உஷாமேரி (வயது 47). இவர் களியக்காவிளையை அடுத்த பனங்காலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் தினமும் பள்ளி முடிந்த பின் களியக்காவிளை பஸ்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

9 பவுன் நகை பறிப்பு

இந்தநிலையில் நேற்று மாலையும் பள்ளி முடிந்த பின்பு உஷாமேரி பஸ்சில் களியக்காவிளை பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து நெடுங்கோடு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். உஷாமேரியின் அருகில் வந்ததும், அருண் வீடு எங்கு உள்ளது என கேட்டுள்ளனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவன் உஷாமேரியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாமேரி சத்தம் போட்டார். ஆனால் அந்த மர்ம நபர்கள் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

கேமரா காட்சிகள் ஆய்வு

இதுகுறித்து உஷாமேரி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிளில் வந்து பள்ளி ஆசிரியையிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story