சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 936 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 38 மடிக்கணினிகள் இருந்தன. மேலும் அதில் ஒருவரிடம் இருந்த செல்போன் பேட்டரிகளை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது அதில் தங்க தகடுகள் இருந்தன. பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் குப்பை தொட்டியில் சிறிய அளவிலான எலக்ட்ரிக் மோட்டார் கேட்பாரற்று கிடந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை பிரித்து பார்த்தபோது தங்க துண்டுகள் இருந்தன. அதில் இருந்த ரூ.16 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள 380 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மேலும் விமான நிலைய பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் இருந்த டிராலியின் ஓரமாக சந்தேகப்படும்படியாக சின்ன அட்டைபெட்டி கிடந்தது. அதை பிரித்து பார்த்த போது தங்க கட்டிகள் இருந்தது. அதில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 356 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் 2 நாளில் நடத்திய சோதனையில் ரூ.93 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 936 கிராம் தங்கம் மற்றும் 38 மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story