சென்னை: ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து; தூங்கிக் கொண்டிருந்தவர் பலியான சோகம்


தினத்தந்தி 1 Aug 2022 4:05 AM GMT (Updated: 1 Aug 2022 4:23 AM GMT)

சென்னை அருகே ஏ.சி.வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

சென்னை:

சென்னை கொளத்தூர், வெற்றி நகர் மண வாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம் (வயது 28). இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி அவரது அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று இரவு எட்டு மணிக்கு ஷ்யாம் வீட்டில் தனது அறையில் ஏ.சி மற்றும் டி.வி ஆன் செய்துவிட்டு படுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென ஏ.சி தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கீழ்தளத்தில் வெடித்த சத்தம் கேட்டு முதல் தளத்தில் இருந்த ஷாமின் அப்பா மற்றும் தம்பி வந்து பார்த்தபோது அறை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் அறைக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் திரு.வி.க நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செம்பியம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த அறையில் இருந்த ஷியாமை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை என தெரிவித்தனர்.


Next Story