பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்


பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
x

பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்றார். ஜெகத்ரட்சகன் எம்.பி., ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.150 கோடியே 58 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 24 பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.22 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 5 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 71,103 பயனாளிகளுக்கு ரூ.267 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 302 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். .

அப்போது அவர் பேசியதாவது:-

குதிரை படை

ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக உருவாகிய மாவட்டம். இந்த பகுதி ஆங்கிலேயர் காலத்தில் குதிரை படையாக இருந்த பகுதியாகும். இங்குள்ள பழமையான கட்டிடங்களில் ராணுவ அதிகாரிகள் தங்கி இருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் குதிரை படைக்கான முக்கிய தளமாக ராணிப்பேட்டை விளங்கியது.

புதிதாக உருவாகினாலும் பழமை மாறாத வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாக திகழ்கிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாகவும் உள்ளது. இங்கு அதிக கனிம வளங்கள் நிறைந்துள்ளன. 108 திவ்ய தேசங்களில் 65-வது திவ்ய தேசமாக சோளிங்கர் அமைய பெற்றுள்ளது. தோல் தொழிற்சாலைகளின் இதயமாக ராணிப்பேட்டை உள்ளது. உலகளவில் தோல் உற்பத்தி, ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றுகிறது. பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலை பெறுகிறது. அனைத்து சமுதாய மக்களும் சமரசத்துடன் வாழும் மாவட்டம்.

சாதனை

இங்கு மீண்டும் சிறப்பாக மஞ்சப்பை திட்டம் செயல்படுத்துவதை பாராட்டுகிறேன். 3 மணி நேரத்தில் 187 டன் நெகிழி கழிவுகளை சேகரித்து பெரிய சாதனை படைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் நிகழ்த்தப்பட்ட சாதனையை முறியடித்துள்ளனர்.

இந்த சாதனை பல்வேறு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பிற மாவட்டங்களும் இதுபோன்ற சாதனையை படைக்க வேண்டும். இந்த சிறந்த மாவட்டத்தில் இந்த சிறந்த நிகழ்வை நடத்தும் அமைச்சர் காந்திக்கு எனது பாராட்டுக்கள். அனைத்து துறை அதிகாரிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அமைச்சர் காந்தி மக்கள் செல்வாக்கு கொண்டவர். அதனால் தான் அவர் 4 முறை எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

காந்தி பேட்டை

ராணிப்பேட்டை என்பதற்கு பதில் காந்திபேட்டை என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். இங்கு 71 ஆயிரத்து 103 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்களுக்கு வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 71 ஆயிரம் பேர் அளித்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தனிமனிதனின் கோரிக்கையை பெற்று அவர்களுக்கு உதவிகள் வழங்கும் அரசாக உள்ளது.

குழந்தைகளுக்கு என்ன தேவைப்படும் என்பதை பெற்றோர் தெரிந்து செயல்படுவார்கள். அதேபோல் இந்த அரசும் செயல்படுகிறது.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின், முதல்வரின் முகவரி திட்டம், குறைதீர்க்கும் முகாம் மூலம் மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

காலணி உற்பத்தி பூங்கா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் மற்றும் காலணி உற்பத்தி சிறந்து விளங்குகிறது. அதை சர்வதேச தரத்தில் உயர்த்தி அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இங்கு நான் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன். பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். குறிப்பாக பெண்கள் பலர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் வலுபெறும்.

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் இதுவரை 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம். அதனால்தான் நான் உங்கள் முன்பு கம்பீரமாக நின்று இதை கூறுகிறேன்.

எனக்கு எதற்கு விளம்பரம்?

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு புரியவில்லை. நான் தான் அடுத்த முதல்-அமைச்சர் என அலைந்து கொண்டிருக்கிறவர்கள். இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை பட்டியலிட்டு உங்கள் முன்னே கூறி வருகிறோம். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாக தெரியும் என்பது போல சிலர் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கூறுகிறார்கள் ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர் என்று. இனிமேல் எனக்கு எதற்கு விளம்பரம். 55 ஆண்டுகள் அரசியலில் உள்ளேன்.

நரிக்குறவர், இருளர் இன வீட்டிற்கு செல்கிறார், அங்கு சாப்பிடுகிறார் என்ற செய்தியை வைத்து அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு சென்றதால் தான் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதிக்கு மனு பெற வந்தேன். அப்போது நரிக்குறவர் பெண்கள் என்னிடம் பேசியபோது பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். ஆட்சிக்கு வந்ததும் தற்போது அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நரிக்குறவர்கள், இருளர்கள் இன மக்கள் வீடுகளுக்கு சென்றதோடு எங்களுடைய கடமை முடியவில்லை.

நரிக்குறவர்களுக்கு உதவி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 293 நரிக்குறவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 9,600 இருளர் இன மக்கள் உள்ளனர். இதில் 5,267 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு செயல்படும். இன்று இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் 20 பேருக்கும் 9,562 மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட புத்தகப்பையில் முன்னாள் முதல்-அமைச்சர் படம் இருந்தது. நான் நினைத்திருந்தால் அதை மாற்றி வழங்கி இருக்கலாம். ஆனால் அதில் ரூ.17 கோடி செலவு ஏற்படும் என்பதால் படத்தை மாற்றாமல் அப்படியே மாணவர்களுக்கு வழங்கினேன்.

திராவிட மாடல்

திராவிட மாடல் என்றால் என் முகம்தான் நினைவுக்கு வரும். மேலும் பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு என் முகம் தான் ஞாபகம் வரும். என்றும் உங்களில் ஒருவன் நான்.

அனைவரின் கலவையாக நான் முதல்வராக உள்ளேன். இது நமக்கான ஆட்சி. கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் செய்ய முடியாததை நான் சீர் செய்துள்ளேன். என் சக்தியை மீறி உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரப்பன், நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் நன்றி கூறினார்.

முன்னதாக விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி வெள்ளியால் ஆன செங்கோலை நினைவு பரிசாக வழங்கினார்.


Next Story