கலெக்டர் அலுவலகத்தில் 5 வயது பெண் குழந்தையுடன் கர்ப்பிணி திடீர் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் 5 வயது பெண் குழந்தையுடன் கர்ப்பிணி திடீர் போராட்டம்
x

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 7 மாத கர்ப்பிணி தனது 5 வயது பெண் குழந்தையுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 7 மாத கர்ப்பிணி தனது 5 வயது பெண் குழந்தையுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கர்ப்பிணி போராட்டம்

திருவண்ணாமலை அருகில் உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மனைவி அபிராமி 5 வயதான மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அபிராமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் குழந்தையுடன் கர்ப்பிணி அபிராமி கலெக்டர் அலுவலகத்தின் போர்ட்டிகோ முன்பு திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானம் செய்து குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க அபிராமியை அழைத்து சென்றனர்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நானும், முருகனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் நான் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். திருமணமானபோதில் இருந்தே குடிபோதையில் வரும் கணவர் முருகன் அடிக்கடி என்னை அடித்து வெளியே விரட்டி விடுவார். மீண்டும் சேர்த்து கொள்வார்.

கடந்த 11-ந் தேதி தகாத வார்த்தைகளால் பேசி மீண்டும் தன்னை வெளியற்றினார். இது குறித்து பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தேன். ஆனால் சரியான நடவடிக்கை இல்லாததால் வாணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தேன். அங்கும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

என் கணவர் மறு திருமணம் செய்ய போவதாக தெரிகிறது. என் பெற்றோரும் என்னை ஏற்கவில்லை. 7 கர்ப்பிணியாக உள்ள நிலையில் நான் பெண் குழந்தையுடன் எங்கு செல்வது என்று தெரியவில்லை. எனவே எங்கள் நிலையை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் கூறினர்.


Next Story