கார் மோதி, வங்கி முன்னாள் அதிகாரி பலி


கார் மோதி, வங்கி முன்னாள் அதிகாரி பலி
x

தேவகோட்டை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி வங்கி முன்னாள் அதிகாரி பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி வங்கி முன்னாள் அதிகாரி பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

கார் மோதியது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா சாலை முதல் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவருடைய மனைவி சீதா (62). செல்வராஜ் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் தேவகோட்டை அடுத்த வளங்காவயலில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தனது மனைவி சீதாவுடன் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

திருச்சி-ராமேசுவரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது கானாத்தாங்காடு விலக்கு அருகே திரும்பினார். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிஸ்தேவன் தீட்சித் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

பலி

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடைய மனைவி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து அறிந்த ஆறாவயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story