சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை-அமைச்சர் ரகுபதி பேட்டி


சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை-அமைச்சர் ரகுபதி பேட்டி
x

சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் வெளியே வந்தது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும். தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்றச்செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்ததின் அடிப்படையில் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது என்று மத்திய இணை மந்திரி முருகன் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. குற்றவாளிகள் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story