மாங்காய் பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு


மாங்காய் பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு
x

தாம்பரம் அருகே மாங்காய் பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

சென்னை

சென்னை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் சுந்தரி (வயது 60). இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அருகே ஜெயலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் முரளிதரன் (80) என்பவரது தாயார் பாக்கியலட்சுமி உடல் நிலையை கவனித்து கொள்வதற்காக கடந்த ஒரு வருடமாக சுந்தரி வேலை பார்த்து வந்துள்ளார்,

இதற்கிடையே நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற சுந்தரி மாலை வேலை முடித்தவுடன் முதல் மாடிக்கு சென்று மாங்காய் பறித்து கொண்டு இருந்தார். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இதனால் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுந்தரியை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story