மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த என்ஜினீயர் கைது


மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த என்ஜினீயர் கைது
x

மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

அந்தியூர்

மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

தாலி சங்கிலி பறிப்பு

ஆப்பக்கூடலை அடுத்த அத்தாணி அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். அவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது50). இவர் கடந்த 18-ந் தேதி மதியம் சுமார் 1.30 மணி அளவில் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் அங்கு நைசாக நுழைந்தார். பின்னர் விஜயலட்சுமியின் முகத்தில் மிளகாய்பொடியினை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடிவிட்டார்

இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் சக்திவேலின் வீடு முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு மேகராவை ஆய்வு செய்து வந்தனர். அதில் மர்மநபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து வீடு முன்பு இறங்குவதும், பின்னர் வீட்டு உள்ளே செல்வதும் பதிவாகியிருந்தது.

என்ஜினீயர் கைது

இதைத்தொடர்ந்து அதில் பதிவான மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் அத்தாணியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கள்ளிப்பட்டி வலையபாளையத்தை சேர்ந்த கார்த்தி (வயது29‌) என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்ததும், இவர் தான் அத்தாணி கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்த விஜயலட்சுமி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 பவுன் தாலி சங்கிலியையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story