சாணார்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கிய 4 பேர் கைது


சாணார்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கிய 4 பேர் கைது
x

சாணார்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கொசவபட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் இன்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூட்டைகளில் 480 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42), வேடசந்தூர் மாரம்பாடியை சேர்ந்த சத்யா (35), மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் (27), கொசவபட்டியை சேர்ந்த அமுதா (47) என்பதும், பெங்களூருவில் இருந்து கார் மூலம் புகையிலை பொருட்களை கடத்தி வந்து, கொசவபட்டியில் பதுக்கி வைத்திருந்தும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 4 பேரையும் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 480 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story