குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு  காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

தேனி அருகே குடிநீர் கேட்டு காலி்க்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தேனி

தேனி அருகே வயல்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக வினியோகம் செய்யும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வயல்பட்டியில் உள்ள வீரபாண்டி-தேனி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story