விதை பண்ணைகளில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
விருத்தாசலம் பகுதி விதை பண்ணைகளில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மற்றும் நல்லூர் வட்டாரங்களில் அமைந்துள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சென்னை விதை ஆய்வு வேளாண்மை இணை இயக்குனர் மல்லிகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் கேட்கக்கூடிய விதைகள் அனைத்தும் தரமாகவும், 100 சதவீதம் முளைப்பு திறன் உள்ள வகையில் நியாயமான விலையில் கிடைத்திட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து சின்னகண்டியங்குப்பம் கிராமத்தில் உளுந்து வம்பன் ரகம் பயிரிடப்பட்டுள்ள விதை பண்ணையை நேரில் ஆய்வு செய்து விதை பண்ணையில் ஏதேனும் பூச்சி நோய்கள் தென்படுகிறதா? நன்றாக பராமரிக்கப்படுகிறதா?என பார்வையிட்டார்.
தரமான விதை
இதேபோல் குப்பநத்தம் கிராமத்தில் மணிலா கே 1812 ரகம் பயிரிடப்பட்டுள்ள விதைப்பண்ணையையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அதனை முறையாக பராமரிக்க உத்தரவிட்டதுடன், தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது விதைச் சான்று உதவி இயக்குனர் பிரேமலதா, விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், விதை ஆய்வாளர் செந்தில்குமார், விதைச்சான்று அலுவலர் மகேஷ், உதவி விதை ஆய்வாளர்கள் ராமசாமி, ஆல்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.