போக, போக சரியாகிவிடும்: அ.தி.மு.க.வில் பிரச்சினை என மாயத்தோற்றம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க.வில் பிரச்சினை என மாயதோற்றம் உருவாகி உள்ளது. இது போக, போக சரியாகிவிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தொண்டர்களின் நலனுக்காக அ.தி.மு.க. உருவாக்கப்பட்டது. தொண்டர்களை என்றும் பிளவுபடுத்தி பார்க்க முடியாத இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. சிறு, சிறு பிரச்சினைகள் இடையில் வரும். அது சரியாக போய்விடும். அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. தலைமையில் தான் பிரச்சினை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது. அது போக போக சரியாகி விடும். தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார் என்கிற டி.டி.வி.தினகரனின் கருத்து நல்ல கருத்து, இதை வரவேற்கிறோம். வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்திப்பேன்.
அண்ணன்-தம்பி இயக்கம்
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அண்ணன் தம்பி இயக்கம் தான். ஆனால் மாறுபட்ட பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பாதை எம்.ஜி.ஆர். காட்டி தந்த பாதை. அதில் பயணிக்கிறோம். அ.தி.மு.க. இடத்தை பா.ஜனதா பிடிக்க பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அ.தி.மு.க.வின் ஒற்றுமையை பா.ஜனதா குலைக்கவில்லை.
அ.தி.மு.க.வை யாராலும் மிரட்ட முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். எங்களை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க. சட்ட விதியை எம்.ஜி.ஆர். உருவாக்கினாரோ அதில் எந்த மாசும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் தற்போது தர்மயுத்தம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






