பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்காது-அண்ணாமலை பேச்சு


பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்காது-அண்ணாமலை பேச்சு
x

பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருச்சி

திருச்சி, ஜூன்.8-

பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

ஜி.எஸ்.டி.நிலுவை தொகை

திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் நேற்று பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி.யில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, எங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரதமர் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை ரூ.9 ஆயிரத்து 602 கோடியை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று மேடையில் கூறிவிட்டார்.

இந்தி திணிக்கப்படாது

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்தான் மருத்துவ சீட் 66 ஆயிரம் சீட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்பதே நமது இலக்கு. பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை கண்டிப்பாக திணிக்காது.

அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தியை தேர்வு செய்து படிக்கலாம் என்று கூறி வருகிறார். புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு தான் தமிழகத்தின் கல்வி கொள்கை என்று கூறி வருகின்றனர். இங்கு உள்ள அமைச்சர்கள் அனைவருமே தமிழகத்தை தாண்டி எங்குமே செல்ல மாட்டார்கள்.

கச்சத்தீவை பா.ஜ.க. மீட்கும்

கச்சத்தீவை பா.ஜ.க. மீட்கும். 18 கோடி தொண்டர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி பா.ஜ.க.தான். நீங்கள் (தி.மு.க.) செய்யும் ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப்போகிறோம். 2024-ம் ஆண்டு கண்டிப்பாக பா.ஜ.க.வின் எம்.பி. தான் திருச்சியில் இருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story