கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல்


கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல்
x

கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, பா.ஜனதா கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் செண்பகவல்லி அம்மன் கோவில் சந்திப்பில் வேகத்தடை இருந்தது. பாலம்- ரோடு விரிவாக்கத்தின்போது வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் வேகத்தடைகள் இல்லாததால் தினமும் விபத்துகள் அதிகரிப்பதாகவும், எனவே வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று காலை பா.ஜனதா, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பா.ஜனதா நகரசபை கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவர் பரமசிவன், பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, விளையாட்டுத்துறை கோட்ட செயலாளர் பாலு, செய்தி- தொடர்பு மாவட்ட செயலாளர் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால், செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் விக்னேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

மறியல் போராட்டம் காரணமாக எட்டயபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விக்னேஷ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், வருகிற 30-ந் தேதி இரவு புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு இருபுறமும் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story