கடலூரில் பரபரப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்


கடலூரில் பரபரப்பு  அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர்,

சென்னையில் செயல்படும் மாநில கட்டுப்பாட்டு மையத்தை நேற்று மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், கடலூர் மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 7.30 மணி அளவில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

தீவிர சோதனை

பின்னர் அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, வாகனங்கள் நிறுத்துமிடம் என ஆஸ்பத்திரி முழுவதும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் போலீஸ் மோப்ப நாய் கூப்பரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டது. அதுவும் ஆஸ்பத்திரி முழுவதும் மோப்பம் பிடித்தது. ஒரே நேரத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியதால் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நோயாளிகள் பதற்றம் அடைந்தனர்.

மிரட்டல் விடுத்தவர் யார்?

மேலும் 1½ மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய தகவல் புரளி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூரில் பரபரப்பு

அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்


Next Story