பர்னிச்சர் கடை கதவை உடைத்து பணம் திருட்டு


பர்னிச்சர் கடை கதவை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

விருத்தாசலத்தில் பர்னிச்சர் கடை கதவை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஆலடி சாலை துர்கா நகரை சேர்ந்தவர் சையத் சித்திக் பாஷா (வயது 28). இவர் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தொடர்ந்து, நேற்று காலை அவர் கடையை திறந்தார். அப்போது, உள்ளே சென்று அவர் பார்க்கையில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடையில் உள்ள பொருட்களை பார்த்தார்.

அப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த 43 ஆயிரம் ரூபாயை காணவில்லை. நள்ளிரவில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சி

இது குறித்து அவர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி, அதன் மூலம் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story