காப்புக்காட்டில் எல்லை கற்களை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு


காப்புக்காட்டில் எல்லை கற்களை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Sep 2022 6:45 PM GMT (Updated: 21 Sep 2022 6:46 PM GMT)

பெரும்பாலை அருகே காப்புக்காட்டில் எல்லை கற்களை சேதப்படுத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தர்மபுரி

பென்னாகரம் தாலுகா பெரும்பாலை அருகே குழிக்காடு கிராமத்தில் தர்மபுரி வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு அமைந்துள்ளது. இங்கு பசுமை தமிழகம் திட்டம் 2022- ஐ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காப்புக்காட்டிற்குள் செடிகளை நடவு செய்ய குழிகள் வெட்டப்பட்டன. அதே பகுதியை சேர்ந்த சிலர் பெரும்பாலை காப்புக்காட்டில் எல்லை கற்களை உடைத்து சேதப்படுத்தினர். இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர்.

அப்போது குழிக்காடு கிராமத்தை சேர்ந்த சுகேந்திரன், திரிசங்கு, சந்திரன், மாதையன், அர்ஜூனன் ஆகியோர் பசுமை தமிழகம் திட்டத்தை செயல்படுத்த வெட்டப்பட்ட குழிகளை பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யும் நோக்கத்துடன் சேதப்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து வன எல்லை கற்களை சேதப்படுத்தி வனத்துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story