பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள்
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

செஸ் ஒலிம்பியாட் போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் ஏற்கனவே பள்ளி அளவில் நடத்தப்பட்டன. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக பள்ளி அளவில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு நேற்று வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற்றன.

1,168 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

இதில் ெபரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் வட்டாரத்திற்கு குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் செஸ் போட்டிகள் நடைபெற்றன.

இதில் பெரம்பலூர் வட்டாரத்தில் 248 மாணவ-மாணவிகளும், ஆலத்தூர் வட்டாரத்தில் 282 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 356 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 292 பேரும் என 359 அரசு பள்ளிகளில் இருந்து மொத்தம் 1,168 மாணவ-மாணவிகள் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக குன்னம் பள்ளியில் நடந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார்.

72 பேர் தேர்வு

இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் என மொத்தம் 72 மாணவ-மாணவிகள், வருகிற 25-ந் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில், முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மேலும் அவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் 2 இடம் பிடிப்பவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story