சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றிவிட்டு வரும் காட்சியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடக கணக்குகளின் முகப்பு படமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

சென்னை,

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, வருகிற 13-ந் தேதி முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார். மேலும் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள், பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

தேசிய கொடி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களுடைய சமூக ஊடக முகப்பு படங்களை நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்கலால் நேரு தேசிய கொடியை ஏந்தியிருப்பது போன்று மாற்றம் செய்தனர்.

இதேபோல தேசிய கொடியை ஏராளமானோர் தங்களுடைய வாட்ஸ்-அப் முகப்பு படங்களாகவும் வைத்துள்ளனர். மேலும் நாட்டுக்காக போராடிய, போராடி வரும் முப்படை வீரர்கள், சுதந்திரம் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

முகப்பு படத்தை மாற்றிய மு.க.ஸ்டாலின்

இந்தநிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக ஊடக கணக்குகளின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அதாவது, சுதந்திர தினத்தன்று மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்ற பின்னர் முதல் முறையாக அப்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றிவிட்டு நடந்து வரும் படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், ''ஆகஸ்டு 15-ம் நாளன்று மாநில முதல்-அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!'' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story