'தினத்தந்தி' ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் வழங்கினார்...!


தினத்தந்தி ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் வழங்கினார்...!
x

‘தினத்தந்தி' ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை,

'தினத்தந்தி' ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளன்று வழங்கப்படும்.

அதன்படி, 'கலைஞர் எழுதுகோல் விருது' க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு 'தினத்தந்தி'யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

வரலாற்று சுவடுகள் நூல் பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன்.

அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, 'தினத்தந்தி' குழுமத்தினால் வெளியிடப்பட்ட 'வரலாற்றுச் சுவடுகள்' நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.

இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை தினத்தந்தி மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கி சிறப்பித்தார். விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழலையும் மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.

உதவி ஆசிரியராக தினத்தந்தியில் பணியை தொடங்கிய ஐ.சண்முகநாதனின் பத்திரிகை பணி முழுவதும் தினத்தந்தியிலேயே இருந்தது. தினத்தந்தி பத்திரிகை ஆசிரியராக நீண்ட நெடிய ஆண்டுகளாக பணியாற்றியுள்ள அவர், தினத்தந்தி பணியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story