மாமியாரின் சடலத்துடன் கமுக்கமாக தூங்கிய மருமகள்...! மறுநாள் காலையில் உடைந்த மர்மம்


மாமியாரின் சடலத்துடன் கமுக்கமாக தூங்கிய மருமகள்...! மறுநாள் காலையில் உடைந்த மர்மம்
x

மருமகள் அம்சா, மாமியார் ராமரோஜா, கள்ளகாதலன் கார்த்திகேயன்

திருப்பத்தூர் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மருமகள் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே வீட்டு திண்ணையில் படுத்து தூங்கிய பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கழுத்தை நெரித்து கொலை

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார்.

இதனால், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராமரோஜா, மருமகள் அம்சா (வயது 31) மற்றும் 10 மாத பேத்தியுடன் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இரவு பணிக்கு சென்றுவிட்டார். திண்ணையில் படுத்து தூங்கிய ராமரோஜா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் விவகாரம்

சென்னையில் வேலை பார்க்கும் அம்சாவின் கணவர் பெரும்பாலும் சென்னையிலேயே இருப்பார். இதனை சாதகமாக பயன்படுத்திய அம்சாவுக்கும், கட்டிட மேஸ்திரி கார்த்திகேயனுக்கும் (21) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். அம்சாவை அவரது மாமியார் ராமரோஜா கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அம்சாவுடன் கார்த்திகேயன் மற்றும் பிளஸ்-2 படித்த 17 வயது வாலிபர் ஆகியோர் சேர்ந்து ராமரோஜாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு வாக்குமூலம்

அதில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அம்சாவும, கார்த்திகேயனும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் துணிக்கடையில் வேலை பார்த்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அம்சா திருமணமாகி புதூர் சென்றுவிட்டார். அம்சாவின் கணவர் சென்னை சென்றுவிட்டதால் அவர் தனியாக இருந்த போது அவரது வீட்டுக்கு கார்த்திகேயன் சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து மாமியார் ராமரோஜாவுக்கு தெரியவந்தது, அடிக்கடி யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என அம்சாவை கண்டித்துள்ளார். இதனால் அவரை தீர்த்து கட்டுவது என அம்சாவும், கார்த்திகேயனும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 29-ந்தேதி மாமனார் செல்வராஜ் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து அம்சா, செல்போனில் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார்.

இதனையடுத்து பிளஸ்-2 படித்த 17 வயது வாலிபருடன் அங்கு வந்தார். கார்த்திகேயன் மற்றும் 17 வயது வாலிபர் பின்பக்கமாக சென்று ராமரோஜாவின் வாய் மற்றும் மூக்கை மூடியதால் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக துப்பட்டாவில் அம்சாவும், கார்த்திகேயனும் சேர்ந்து ராமரோஜாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

3 பேர் கைது

அதன்பின் கொலை செய்யப்பட்ட ராமரோஜாவை வீட்டுக்கு முன்பு படுக்க வைத்தது போல் போட்டு விட்டு விட்டு கார்த்திகேயனும், 17 வயது வாலிபரும் சென்றுவிட்டனர். மறுநாள் காலை அம்சா ஒன்றும் தெரியாதது போல் மாமியாரை யாரோ கொலை செய்து விட்டனர் என்று கூறி நாடகமாடியுள்ளார்.

விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அம்சா தனது மாமியாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அம்சா, கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 17 வயது வாலிபரை செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரும் இதனையே வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை மருமகளே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story