காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு


காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு
x

ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

கடலூர் மாவட்டம் தொண்டமாநத்தம் அருகே உள்ள எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் சந்தோஷ் (வயது 34). விவசாயி. இவர் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் அவர்கள் ஆலம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது சந்தோஷ் ஆழமான பகுதிக்கு சென்றார். இதில் எதிர்பாராமல் அவர் ஆற்றின் சுழலில் சிக்கி தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் சந்தோஷ் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சந்தோசை தேடினர்.

உடல் மீட்பு

பின்னர் அரைமணிநேர தேடுதலுக்கு பின்பு சந்தோசின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சந்தோசுக்கு நித்யா என்ற மனைவியும், அஜய் என்ற மகனும் உள்ளனர். தற்போது நித்யா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story