அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும். காலமுறை, தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர், செவிலியர், கிராம உதவியாளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேயத்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாஜுதீன் கோரிக்கைளை விளக்கி பேசினார். பேரூராட்சி ஊழியர் சங்க தலைவர் சுந்தரம், பிற்பட்டோர் நலத்துறை ஊழியர் சங்க தலைவர் அழகுராஜா, சாலைப் பணியாளர் சங்க தலைவர் முத்தையா, பொது சுகாதாரத்துறை சங்க தலைவர் ராஜேந்திரன், சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் பவானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






