இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; துணை தாசில்தார் அதிரடி கைது


இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; துணை தாசில்தார் அதிரடி கைது
x

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திண்டுக்கல்

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இறப்பு சான்றிதழ்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த தலையாரிபட்டியை சேர்ந்தவர் இளமுருகன் (வயது 49). இவர், 1986-ம் ஆண்டு இறந்த தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து திருமலை அம்மாளுக்கான இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக இள முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளமுருகன் தான் கூலி வேலை செய்வதாகவும், தன்னால் அவ்வளவு பணத்தை தர இயலாது என தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

பின்னர் ஒரு வழியாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக இறப்பு சான்றிதழ் வழங்குவதாக ஜெயபிரகாஷ் தெரிவித்தார். அந்த பணத்தை கொடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இளமுருகன், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் போலீசார் இளமுருகன் கொடுத்த புகார் உண்மை தானா? என விசாரணை நடத்தினர்.

அதில் துணை தாசில்தார் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரத்தை இளமுருகனிடம் கொடுத்து துணை தாசில்தாரிடம் கொடுக்கும்படி கூறினர்.

துணை தாசில்தார் கைது

அவரும் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு நேற்று மாலை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றார். இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி மற்றும் போலீசார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சாதாரண உடையில் மறைந்திருந்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த இளமுருகன், ஜெயபிரகாஷிடம் தான் கொண்டு வந்த பணத்தை கொடுத்தார். அதை அவர் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயபிரகாசை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு அவரை அழைத்துச்சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.


Next Story