தேவர் ஜெயந்தி விழா: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு


தேவர் ஜெயந்தி விழா: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு
x

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மதுரை,

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேவர் ஜெயந்தி விழாவைமுன்னிட்டு மதுரை நகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு10.30 மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழைய தடை செய்யப்படுகிறது.

விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கிவரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை. நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடுஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் திரும்பி மாற்று பாதையாக கக்கன்சிலை, ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாக செல்லவேண்டும்.

மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், அவுட் போஸ்ட், பாண்டியன் ஓட்டல், தாமரைத்தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும். வடக்குவெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேசன் ரோடு, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்லவேண்டும்.

இதுபோல், மேலமடைபகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள், ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும். குறிப்பாக, தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள், நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்லவேண்டும்.

எனவே,தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, வியாபாரிகள், வாகனஓட்டுனர்கள், பொதுமக்களின் நலன்கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதைகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story