உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:45 PM GMT)

கமுதி அருகே கோவில் திருவிழாவில் உடல் முழுவதும் சேறுபூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம்

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 28-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.. பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் இரவு முதல் நேற்று காலை வரை 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய,விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தும், ஆயிரம் கண்பானை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவில் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு ஊர் எல்லையில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து சக்திமாரியம்மனை வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமத்தலைவரும், வாக்குவட்டி ஊராட்சி மன்ற தலைவருமான நாகரத்தினம், கமுதி யூனியன் துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story