திருச்செந்தூர் மாரியம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு


திருச்செந்தூர் மாரியம்மன் கோவில் கொடை விழா:  பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
x

திருச்செந்தூர் மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

கொடைவிழா

திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி மாலையில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் இரவு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் பகலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் கும்பம் வீதி உலா நடைபெற்றது.

பால்குடம் ஊர்வலம்

மாலையில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. பகல் 1 மணியளவில் மஞ்சள் நீராட்டு தீபாராதனையும், அம்மன் கும்பம் ஊரில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நகரில் முளைப்பாரி ஊர்வலமாக வந்து, கடலில் பிரி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சுடலை மாடசுவாமி கோவில

சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 3 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி, நேற்று பகல் 11.30 மணியளவில் கோவிலில் திருக்கால் நாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 25-ந் தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக ரதவீதி வழியாக கோவிலுக்கு வருகிறது. பின்னர் சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடக்கிறது.

பின்னர் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடக்கிறது. அதேபோல் இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடக்கிறது. 27-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ் மகா சபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


1 More update

Next Story