தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி சவேரியார் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து கலங்கலான நீர் வருவதால் இப்பகுதி மக்கள் இந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பருவம் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் பெண்களிடம் மத்திய பஸ் நிலையத்தில் குடிபோதையில் சுற்றித்திரியும் போதை ஆசாமிகள் தகராறு செய்வதுடன், தவறாக நடக்க முயற்சிக்கின்றனர். எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார் சாலை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், எம். இடையபட்டி முதல் தெத்தூர் வரையிலான சாலை குண்டும், குழியமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீணாகும் குடிநீர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி கிராமம், ஆளிபட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய் தொற்று ஏற்படும் அபாயம்

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் அருகே உள்ள கோபாலகிருஷ்ணன் கோவில் தெரு மற்றும் பகவதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், சாலையோரம் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்களின் அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடத்தை வைத்து குடிநீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story