தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் நிறுத்தப்படுவதால் வழக்கமாக வரும் பஸ்கள் அந்த பகுதியை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அதன் அருகில் வேறு ஒரு பகுதியில் நிறுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவுமியா, சிவகாசி.

சுரங்கப்பாதை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதையில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மழைநீரை உறிஞ்சி எடுப்பதற்கு மோட்டார் வசதியினை ஏற்படுத்தி தருவதுடன் சுரங்கப்பாதை சாலையை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நாகம்பட்டி.

எச்சரிக்கை பலகை வேண்டும்

விருதுநகர் பிரதான சாலையில் யானை குழாய்தெரு அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் அருகில் எவ்வித எச்சரிக்கை பலகையும் இல்லை. அதிவேகத்தில் வரும் வாகனஓட்டிகள் கவனக்குறைவினால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தின் அருகில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

கண்மாயை சூழ்ந்த கருவேல மரங்கள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் சுந்தரபாண்டியம் அருகே செங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் அப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த கண்மாயில் நீரை சேமிப்பதன் மூலம் பல ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். தற்போது இந்த கண்மாயில் கருவேல மரங்கள் சூழ்ந்து நீர் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சுந்தரபாண்டியம்.

சேதமடைந்த சாலை

விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். சேதமடைந்த இந்த சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.


Next Story