'பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக துடியாக துடிக்கிறது' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக துடியாக துடிக்கிறது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 18 Dec 2022 4:18 AM GMT (Updated: 18 Dec 2022 5:10 AM GMT)

பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கின்ற கட்சி தான் திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.க்கு எதிராக அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி வரப்போகிறது என்றார். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப்போகிறது. திமுகவிடம் ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது' என்றார்.

அதிமுக எம்.பி. சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த கட்சி, எந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு தன்மை இருக்கிறது. இப்போது யாரோ ஒரு 3-ம் கட்ட தலைவர்கள் இல்லை அது கூட்டணி வைக்கிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும்... அல்லது திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும்... அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன். யூகங்களுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்' என்றார்.

அதிமுக எம்.பி. சிவி சண்முகம் , தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் பேச்சுக்கள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தேர்தல் இன்னும் ஓராண்டில் நெருங்க நிலையில் காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கின்ற ஒரு கட்சி தான் திமுக. எனவே தான் அதை கண்கூடாக பார்த்தது தான் சிவி சண்முகமே கூறியுள்ளார்.

அப்படி வந்து உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று அந்த உறவு வைத்துக்கொள்வதில் திமுக போன்று ஒரு சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியல் வேறு எந்த கட்சியும் செய்யாது. அதை திமுக மட்டும் தான் செய்யும்' என்றார்.

மேலும் படிக்க.. 'யாரோ ஒரு 3-ம் கட்ட தலைவர்கள்....'; பாஜக-திமுக கூட்டணி குறித்து சிவி சண்முகம் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி




Next Story