அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை


அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை
x

ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37), டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயதில் மகன் உள்ளனர்.

மணிகண்டனுக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அந்த இடத்தை அளக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மணிகண்டன் மரத்தில் ஏறி தற்கொலைக்கும், மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளார்.

வீடியோ பதிவிட்டு தற்கொலை

இந்த நிலையில் இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் வீடியோ ஒன்றை பதிவிட்டு நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோ பதிவில், எனது கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட தாசில்தார், சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இறந்த பிறகாவது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பதிவிட்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் நடவடிக்காமல் தனது கணவரின் சாவுக்கு காரணமாக இருந்ததாக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணிகண்டனின் மனைவி சுகன்யா திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.


Next Story