முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

அம்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

அம்பை அருகே உள்ள ஆலடியூரில் இருந்து செட்டிமேடு செல்லும் சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் நேற்று முன்தினம் மாலை முதியவர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை தீயணைப்பு வீரர்கள் மற்றும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ேபாலீசார் விசாரணையில், இறந்து கிடந்தவர் மேல ஏர்மாள்புரத்தைச் சேர்ந்த மாடக்கண்ணு (வயது 60) என்பதும், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

கடந்த 14-ந்தேதி மேல ஏர்மாள்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த நாராயணன் மனைவி ராஜரீகம் என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் மாடக்கண்ணு மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story