மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி தீவிரம்


மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் நுகர்வோரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் நுகர்வோரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் அறிவுறுத்தியது. இதற்கான சிறப்பு முகாம்களையும் நடத்தியது. கடந்த டிசம்பர் 31-ந் தேதி வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 31-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணிக்காக, வீடுகள் தோறும் மின்வாரிய ஊழியர்கள் சென்று இணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அந்தந்த பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்து வருகின்றனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் முத்துசாமி கூறியதாவது:-

வீடுகளுக்கு நேரில் சென்று...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்களுக்கு வர முடியாதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி தொழிற்பேட்டை பிரிவில் நேற்று, கிருஷ்ணகிரி நகர் பகுதிக்குட்பட்ட காந்திநகர், சாந்தி நகர், சென்ட்ரல் தியேட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த பணியில் மேற்பார்வையாளர்கள் தனலட்சுமி, சின்னசாமி வயர்மேன்கள் பயாஸ், ஜெயபிரகாஷ் மற்றும் கேங்மேன் வேலுமணி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வருகிற 31-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story