தினமும் 50 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு


தினமும் 50 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் தினந்தோறும் 50 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திருக்கோவிலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நிரம்பி வழிவதால் பலர் வெளியூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதை தவிர்க்க திருக்கோவிலூர் பகுதியில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

சிறப்பு மருத்துவ முகாம்

இது தவிர திருக்கோவிலூர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும். எனவே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story