முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய வளாகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமத்தைச் சேர்ந்த குணபாலன் என்பவருக்கு குப்புசாமி, வெங்கடேசன், ராமநாதன் என 3 மகன்கள் உள்ளனர். ராமநாதன் ஓய்வுபெற்ற துணை ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் குடும்ப சொத்துக்கள் 3 பேருக்கும் சரிபாதியாக பாகம் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டதில் 3 பேருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ராமநாதன் தனது மகனுக்கு அவருடைய பாகத்தை தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ளாத குப்புசாமி மகன் பிரவீன்காந்தி செந்துைற ரோட்டிலுள்ள மாணிக்க நகரில் உள்ள வீட்டில் இருந்த ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்ற ஆண்டு இருவருக்கும் அடிதடி நடந்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரவீன்காந்தி மீது புகார் அளித்தார். புகாரின் மீது இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியதாக ராமநாதன் கூறி போலீஸ் நிலைய வளாகம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு போட அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


Next Story