கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x

சின்னசேலத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் குமரவேல் மகன் ரமேஷ் (வயது 45). இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ரமேசுக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கமணி மனைவி ரஞ்சிதா(28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும், சின்னசேலம் பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலைக்கு பின்புறம் உள்ள தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படவில்லை.

தூக்கில் பிணமாக தொங்கினர்

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் அங்கு விஷ பாட்டிலும் கிடந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விஷம் அருந்திவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ், ரஞ்சிதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story