இலங்கை கடற்படை தாக்குதலில் 2 மீனவர்கள் காயம்


நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களில் 2 பேர், இலங்கை கடற்படை தாக்குதலில் காயம் அடைந்தனர். அவர்களும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களில் 2 பேர், இலங்கை கடற்படை தாக்குதலில் காயம் அடைந்தனர். அவர்களும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

அந்த 15 மீனவர்களும் நேற்று மன்னாரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை வருகிற 17-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். எனவே வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 பேர் காயம்

இதனிடையே, 15 மீனவர்களில் குமரவடிவேல், வினோத் ஆகிய இருவரும் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் மன்னார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிகிச்சை முடிந்த பின்னர் அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 15 மீனவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால், காப்பகம் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story