ஆடு-கோழிகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி


ஆடு-கோழிகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி
x
திருப்பூர்


குண்டடம் வாரச்சந்தையில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆடு, கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது;-

ஆடு-கோழி விற்பனை

சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிவரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி குண்டடம் வாரச் சந்தைக்கு ஆடு, கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வீடுகளை சுத்தம் செய்து கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தல், புத்தாடைகள் வாங்குதல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இந்த வாரம் இறைச்சி கடைகளில் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10கிலோ எடையுள்ள 1 ஆடு ரூ.6ஆயிரத்து 200க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5ஆயிரத்தி 500க்கு விலைபோயுள்ளது. ரூ.9ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.8ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை விழ்ச்சி ஏற்பட்டது.

கோழிகள் விலை வீழ்ச்சி

அதேபோல் கோழிகளையும் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆயிரக்கணக்கான கோழிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த வாரம் இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வராம் 1 கிலோ ரூ300முதல் ரூ.350 வரை விலைபோனது. ஆனால் இந்தவாரம் 1 கிலோ ரூ270 முதல் ரூ.300 வரை விலைபோனது

கட்டுசேவல்கள் விற்பனை ஜோர்

இந்த வாரம் தரமான கருங்கால் பொன்றம், காகம், நூலான், வெள்ளைக்கால் வெள்ளை, கீறி, மயில், வல்லூறு ரகங்கள் வீரியத்துடன் சண்டை போடக்கூடிய சேவல்களை சுமார் 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை கொண்ட சேவல்களை சண்டையிட்டு பார்த்து தேர்வு செய்து ரூபாய் 3ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வாங்கி சென்றனர்.

நல்ல வீரியத்துடன் சண்டையிடும் சேவல்கள் பண்டிகை காலங்களில் நடைபெறும் சேவல் சண்டையில் சுமார் 1 லட்சம் வரை பந்தயம் செய்வதாக கூறப்படுகிறது. குண்டடம் வாரசந்தையில் சண்டை பிரியர்கள் சண்டையிட்டு பார்த்து தேர்வு செய்து ஆர்வத்துடன் கட்டு சேவல்களை வாங்கிச்சென்றனர். இதனால் இந்த வாரம் சண்டை சேவல்கள் நல்ல விலைக்கு விற்பனையாது,

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story