நல்ல கருத்துகளை பரிமாறி நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்-கலெக்டர் அறிவுரை


நல்ல கருத்துகளை பரிமாறி நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்-கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)

சித்தார்கோட்டை ஊராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் நல்ல கருத்துகளை பரிமாறி நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

சித்தார்கோட்டை ஊராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் நல்ல கருத்துகளை பரிமாறி நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.

சமத்துவ பொங்கல் விழா

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு சமத்துவ பொங்கல் விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரி ஜஹான் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான நிகழ்ச்சி நேற்று காலை 11 மணியளவில் சமத்துவபுரம் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி சமத்துவ பொங்கல் விழாவை ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகர், சித்தார்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரி ஜஹான் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

நல்ல கருத்துகள்

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருநாளில் பல்வேறு சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து ஆண், பெண் மூன்றாம் பாலினத்தவர் என எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரும் ஒன்று கூடி பங்கேற்பது மகிழ்ச்சியாகும். சமத்துவம் என்பது நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். பொதுவாக ஒரு அறைக்குள் இருந்து வெளியில் என்ன நடக்கிறது என்பதை உணர முடியும். ஆனால் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது கடினம். எனவே ஒவ்வொருவரும் கட்டுப்பாடு என்ற அறையை விட்டு வெளியே வந்து நல்ல கருத்துகளை பரிமாறி அனைவருடனும் நற்பண்புகளை வளர்த்து சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.

முன்னதாக ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.. நிகழ்ச்சியில் சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மகேஸ்வரி சசிகுமார், முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மைதீன், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் அலி, சித்தார்கோட்டை ஊராட்சி செயலர் முனியசாமி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத் தலைவர்கள், முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப் பெருமாள் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story