இரவில் கொட்டி தீர்த்த கனமழை; குதுகலத்தில் சென்னை வாசிகள்


இரவில் கொட்டி தீர்த்த கனமழை; குதுகலத்தில் சென்னை வாசிகள்
x

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று இரவு சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

சென்னை

சென்னை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. எனினும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடு இல்லை.

இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் இருந்து சென்னை எழும்பூர், சென்டிரல், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, சர்மா நகர், கொடுங்கையூர், மூலக்கடை, மாதவரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதேபோன்று, சென்னையின் புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கன மழை காரணமாக சென்னை வாழ் மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று குளுமையை உணர்ந்ததுடன் வெக்கையின்றி மகிழ்ச்சியுடன் இரவில் தூங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story