முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


முத்தையாபுரத்தில்  தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரத்தில் குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கியதால் மனமுடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சினை

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள சுபாஷ் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் பாலமுருகன் (வயது30). தொழிலாளி. இவருக்கும், மனைவி இசக்கியம்மாளுக்கும் நேற்று அதிகாலையில் குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பாலமுருகன் தாக்கியதில் இசக்கியம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று, பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

தூக்கு போட்டு தற்கொலை

அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதை தொடர்ந்து அவர், வீட்டின் கதவை திறக்குமாறு கணவரை அழைத்துள்ளார். ஆனால் வீட்டிற்குள் இருந்த கணவரிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லையாம். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாலமுருகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தான் தாக்கியதால் மனைவி காயமடைந்ததால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ வீட்டிற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story