தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா


தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. சமத்துவ பொங்கல் விழாவுக்கு மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாநகராட்சி வளாகத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன், பானை உடைத்தல், முறுக்கு கடித்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், அமைச்சர் கீதாஜீவன், மேயர் என்.பி. ஜெகன், கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், கவுன்சிலர்களுடன் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வன அதிகாரி அபிஷேக்தோமர், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், துரைமணி, ஜேஸ்பர், பிரபாகர் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story