திருச்சியில் பயங்கரம்: கொத்தனார் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை


திருச்சியில் பயங்கரம்: கொத்தனார் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை
x

திருவெறும்பூர் அருகே முன்விரோத தகராறில் கொத்தனாரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 37). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார்‍. இவர்களது மகன் பிரதாப் (7), அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் ஜெயபாலுக்கும், அவருடைய வீட்டின் அருகே உள்ள சுந்தர் என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஜெயபாலின் காலில் சுந்தர் அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த வழக்கு திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை ஜெயபாலுக்கும், சுந்தர் தரப்பினருக்கும் இடையே குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஜெயபால் கறி வெட்டும் கத்தியுடன் சுந்தர்(37) தரப்பினரை வெட்ட வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தர் தரப்பினர் ஜெயபாலை வெட்டுவதற்கு ஓட ஓட விரட்டி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெயபால், கொங்கு நகர் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவரை துரத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சுந்தர், அவரது தம்பி மாசி(24), தளபதி(37), அவரது தம்பி ரகு மற்றும் ஹரி (21) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக ஜெயபாலை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் மற்றும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதையடுத்து ஜெயபாலின் உடலை கைப்பற்றிய திருவெறும்பூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுந்தர் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story