நந்தம்பாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள் கண்காட்சி-கருத்தரங்கம்: முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்


நந்தம்பாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள் கண்காட்சி-கருத்தரங்கம்: முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை,

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் தொழில் சம்பந்தப்பட்ட அரங்குகள் மட்டுமின்றி மருத்துவம் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. நீரழிவு நோய், ரத்த கொதிப்பு மட்டுமின்றி பெண்கள் உடல் சார்ந்த பல்வேறு நோய்களை கண்டறிய நவீன முறையிலான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளும் உபகரணங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சென்னையில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளின் பிரதிநிதிகளும் இங்கு அரங்கம் அமைத்து இருந்தனர். உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பல்வேறு கண்டுபிடிப்புகளை விளக்கி கூறினார்கள். மனித சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத குப்பையில் இருந்து எண்ணை தயாரிப்பது உள்பட புது புது கண்டுபிடிப்புகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த அரங்குகள் ஒவ்வொன்றையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருக்கு அங்கிருந்த பிரதிநிதிகள் விரிவாக விளக்கம் அளித்து எடுத்து கூறினார்கள். அப்போது அவருடன் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதன் பிறகு கருத்தரங்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் அரசு துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் நெல்லை, மதுரை மாவட்டங்களில் இருந்தும் காணொலி வாயிலாக பிரதி நிதிகள் பங்கேற்றனர்.


Next Story