கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

கரூர்

கலந்தாய்வு

கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல்நாளான நேற்று சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் (முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு வீரர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபாத் மாணவர்கள்) அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 47 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 17 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சேர்க்கையில் 17 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒருவரும், தேசிய மாணவர் படை சேர்க்கையில் 154 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒருவரும், விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 578 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 28 பேரும் தேர்வு செய்யப்பட்டன.

47 பேருக்கு ஆணை

அந்தமான் நிக்கோபாத் இடஒதுக்கீட்டில் 18 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதனையடுத்து சிறப்பு ஒதுக்கீட்டில் மொத்தம் 814 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட 47 பேருக்கு சேர்க்கைக்கான ஆணையை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.வருகிற 10-ந்தேதி இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 11-ந் தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், 13-ந்தேதி இளங்கலை வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 16-ந்தேதி இளம்அறிவியல் விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், புவிஅமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Next Story