தாளவாடி ஒசூரில் மாதேஸ்வரசாமி கோவில் குண்டம் திருவிழா- பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்


தாளவாடி ஒசூரில் மாதேஸ்வரசாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தார்கள்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி ஒசூரில் மாதேஸ்வரசாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தார்கள்.

மாதேஸ்வரசாமி

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் ேகாவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தார்கள்.

இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் அருகே குறவர் நடனம், புலியாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.

குண்டம்

நேற்று அதிகாலை 5 மணியளவில் அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி திருவீதி உலா நடைபெற்றது.

வழிநெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு தோங்காய், பழம் வைத்து வழிபட்டனர். காலை 7 மணியளவில் கோவிலை சப்பரம் சென்றடைந்தது. இதையடுத்து குண்டம் விழா தொடங்கியது.

முன்னதாக கோவில் முன்பு 30 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்யப்பட்டு இருந்தது.

அனுமதி இல்லை

காலை 7.30 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து மற்ற பூசாரிகள் இறங்கினார்கள். இந்த கோவிலில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பக்தர்கள் தீ மிதிக்க அனுமதி இல்லை.

தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தாளவாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story